தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!

Updated: Fri, Oct 25 2024 22:51 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய இத்தொடரானது வரும் நவம்பர் 05ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. 

அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நவம்பர் 08ஆம் தேதி முதல் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியானது நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீரர்கள் ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

மேற்கொண்டு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள காரணத்தால் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுதவிர்த்து காயம் காரணமாக ஷிவம் தூபே மற்றும் மயங்க் யாதவ் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தோள்பட்டை காயம் காரணமாக ரியான் பராக்கிற்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுடன் ரிஸர்வ் வீரர்களாக முகேஷ் குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி வங்கதேச தொடரில் விளையாடி வரும் வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்.

Also Read: Funding To Save Test Cricket

ரிஸர்வ் வீரர்கள்: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அஹ்மத்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை