சர்வதேச அரங்கில் முதன்மை கிரிக்கெட் அணியாக கருதப்படும் இந்தியா சமீப காலங்களில் திறமை இருந்தும் பல்வேறு சொதப்பல்களால் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் ஒரு ஐசிசி உலக கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. 

Advertisement

அந்த நிலைமை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதால் மாறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை தோல்விகள் மீண்டும் ஏமாற்றத்தையே பரிசளித்தது. இந்த தோல்விகளுக்கு சுமாரான அணி தேர்வு, கேப்டன்ஷிப், ஐபிஎல் தொடரில் அடித்து நொறுக்கும் நட்சத்திர வீரர்கள் இந்தியாவுக்காக தடவலாக பேட்டிங் செய்வது போன்ற நிறைய அம்சங்கள் காரணமாக அமைந்தாலும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்து கடைசி வெளியேறிவது மற்றொரு காரணமாக அமைந்து வருகிறது. 

Advertisement

குறிப்பாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்பிரித் பணிச்சுமை என்ற பெயரில் நிறைய தொடரில் ஓய்வெடுத்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறினார். ஆனால் ஐபிஎல் தொடரில் எந்த போட்டியையும் தவற விடாமல் விளையாடும் அவர் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. 

அதே போல மற்றொரு முதன்மை பவுலரான முகமது ஷமி டி20 உலகக்கோப்பையில் அதிர்ஷ்டமாக விளையாடி சுமாராக செயல்பட்டாலும் வங்கதேச தொடருக்கு முன்பாக காயமடைந்து வெளியேறினார். இப்படி முதன்மை பந்துவீச்சாளர்களான இவர்கள் அடிக்கடி காயமடைவதை வழக்கமாக வைத்திருந்தாலும் ஐபிஎல் தொடரில் மட்டும் மாயாஜாலத்தை போல் அனைத்து போட்டிகளிலும் விளையாடி அட்டகாசமாக செயல்படுகிறார்கள்.

ஆனால் இந்தியாவுக்காக என்றால் ஓய்வுகளை எடுத்துக் கொண்டு வந்தாலும் முக்கிய போட்டிகளில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைகிறார்கள். இந்நிலையில் இது போன்ற நட்சத்திர அந்தஸ்துடைய வீரர்களுக்கு பதில் புதிய துடிதுடிப்பான இளம் பேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார். ஏற்கனவே பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா, தவான் போன்ற காலம் கடந்த வீரர்களுக்கான மாற்று வீரர்களை கண்டறியும் வேலை துவங்கியுள்ள நிலையில் பந்து வீச்சு துறையிலும் புதிய வீரர்களை கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் அடிக்கடி காயமடைவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் புதிய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டிய நேரம் இந்தியாவுக்கு வந்து விட்டது. நாம் சீனியர் பேட்ஸ்மேன்களை போல சீனியர் பந்து வீச்சாளர்களையும் கடந்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சுழல் பந்து வீச்ச துறையிலும் அதே நிலைமை தான.

Advertisement

ஒருநாள் கிரிக்கெட்டில் யார் நம்முடைய டாப் 3 தரமான ஸ்பின்னர்கள்? அது சஹல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தரா? ஒருவேளை அவர்கள் தான் நமது அடுத்த தலைமுறை ஸ்பின்னர்கள் என்று முடிவெடுத்து விட்டால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஏனெனில் நட்சத்திர வீரர்களுக்காக காத்திருந்து அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டிய காலங்களை நாம் கடந்து விட்டோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News