சர்ச்சையை கிளப்பிய ரன் அவுட் தீர்ப்பு; நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹர்மன்பிரீத் கவுர்!

Updated: Sat, Oct 05 2024 10:44 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த லீக் போட்டியில் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாச் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் சோஃபி டிவைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை குவித்தது.  இதில் அதிகபட்சமாக சோஃபி டிவைன் 57 ரன்களையும், ஜார்ஜியா பிளிம்மர் 34 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 

இதைனையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ தஹுஹு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சோஃபி டிவைன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் கள நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தற்சமயம் பெரும் சர்ச்சைக்கு வழிவ்குத்துள்ளது. 

அதன்படி முதல் இன்னிங்ஸின் 14ஆவது ஓவரை தீப்தி சர்மா வீச, அந்த ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் லாங்-ஆஃப் திசையில் அடித்துவிட்டு ரன் ஓடினார். அதேசமயம் அத்தியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை பிடித்த கையோடு, அடுத்த ஓவருக்காக ஃபீல்டிங் செய்ய நடந்து வந்தார். அச்சமயம் தீப்தி சர்மாவும் கள நடுவரிடம் இருந்து தனது தொப்பியை பெற்றுக்கொண்டார். 

ஆனால் பந்து ஹர்மன்ப்ரீத் கைகளிலேயே இருந்ததை கவனித்த நியூசிலாந்து வீராங்கனைகள் இரண்டாவது ரன்னுக்கு ஓட முயன்றனர். இதை சுதாரித்த ஹர்மன்பிரீத் கவுர் உடனே பந்தை விக்கெட் கீப்பரிடம் வீச, ரிச்சா கோஷும் அந்த பந்தை பிடித்து அடிக்க அமெலியா கெர் ரன் அவுட் ஆனார். இருப்பினும் இதற்கு கள நடுவர் அவுட் கொடுக்க மறுத்ததுடன், அதனை டெட் பாலாகவும் அறிவித்தார். இதனால் இந்திய அணி வீராங்கனைகள் என்ன நடந்தது என புரியாமல் திகைத்தனர். 

இதனைத்தொடர்ந்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போட்டியின் நடுவே சலசலப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும் கள நடுவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அமெலியா கெர் மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ரன் அவுட்டானது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை