IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா!

Updated: Sat, Mar 20 2021 23:20 IST
Cricket Image for IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா! (Image Source: Google)

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (மார்ச் 20) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, விராத் கோலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, இந்திய அணி 6 ஓவர்களில் 60 ரன்களை குவித்தது.ரோஹித் சர்மா 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 34 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி என 64 ரன்களை எடுத்திருந்தபோது, ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய சூர்யகுமார், கோலி இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட, ஸ்கோர் கிடுகிடுவென ஏறியது. ஜார்டன் வீசிய 12வது ஒவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து கலக்கினார். 13.1 ஓவர்களில் இந்தியா 141 ரன்களை எடுத்திருந்தபோது சூர்யகுமார் சிக்சர் அடிக்க முயல, பவுண்டரி லைனில் ஜார்டனின் அசத்தலான கேட்சால் அவுடாக நேர்ந்தது. 17 பந்தில் 32 ரன்கள் அடித்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் அதிரடியை தொடர, கோலியும் 35 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். இருவரின் மிரட்டலான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 2 இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. கோலி 80 ரன்களோடும், பாண்டியா 39 ரன்களோடும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ், ரஷீத் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பேரதிர்ச்சியாக தொடக்க வீரர் ஜேசன் ரான் ரன் ஏதுமின்றி புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் - டேவிட் மாலன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. மேலும் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

அதன்பின் பட்லர் 52 ரன்களில் புவனேஷ்வர் பந்தில் பெவிலியன் திரும்பினார். 15ஆவது ஓவரை வீசிய தாக்கூர் அடுத்தடுத்து மாலன், மார்கன் விக்கெட் எடுக்க ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.

அவர்களைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சரிவர சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

இந்திய அணி தரப்பில் சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது . 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை