மகளிர் யு19 உலகக்கோப்பை: இலங்கையை துவம்சம் செய்தது இந்தியா!
அண்டர் 19 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய மகளிர் யு19 - இலங்கை மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இலங்கை அணி வீராங்கனைகாள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் கேப்டன் விஷ்மி குனரத்னே (25), உமாயா ரதனாயகே (13) ஆகியோரைத் தவிற மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றையிலக்க ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் யு19 அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பர்ஷவி சோப்ரா 4 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு வழக்கம்போல கேப்டன் ஷஃபாலி வர்மா - ஸ்வேதா செஹ்ராவத் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷஃபாலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, செஹ்ராவத்தும் 13 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஷும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய சௌமியா திவாரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசியதுடன் 28 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய மகளிர் யு19 அணி 7.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.