INDW vs NZW, 1st ODI: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

Updated: Thu, Oct 24 2024 20:57 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு சீசன் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

அதன்படி இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

பின்னர் ஷஃபாலியுடன் இணைந்த யஷ்திகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தயாளன் ஹேமலதாவும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷ்திகா பாட்டியாவும் 37 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - தேஜல் ஹசாப்னிஸ் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 35 ரன்களுக்கும், தேஜல் ஹசாப்னிஸ் 42 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய தீப்தி சர்மாவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய அருந்ததி ரெட்டி 14 ரன்களுக்கும், ராதா யாதவ் 3 ரன்களுக்கும், சைமா தாக்கூர் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்த நிலையில், தீப்தி சர்மாவும் 41 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளையும், ஜெர்ஸ் கெர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சூஸி பேட்ஸ் ஒரு ரன்னிலும், ஜார்ஜியா பிளிம்மர் 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சோஃபி டிவைன் 2 ரன்களுடன் நடையைக் கட்டிய நிலையில், லாரன் டௌனும் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த புரூக் ஹாலிடே மற்றும் மேடி கிரீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 39 ரன்களில் புரூக் ஹாலிடேவும், 31 ரன்னிலும் மேடி கிரீனும் என விக்கெட்டுகளை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அமெலியா கெர் 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்று வீராங்கனைகள் சொறப் ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை