80 சதவீத அணியை உருவாக்கிவிட்டோம் - ரோஹித் சர்மா!

Updated: Fri, Aug 19 2022 10:19 IST
Image Source: Google

வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை எப்படியாவது வென்றே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. ஏனெனில் தோனி தலைமையில் 2007இல் நடந்த வரலாற்றின் முதல் கோப்பையை வென்ற பின் நடைபெற்ற அத்தனை டி20 உலகக் கோப்பைகளிலும் வெறும் கையுடன் திரும்பிய இந்தியா கடந்த 2013 -க்குப்பின் எந்த ஒரு ஐசிசி உலகக்கோப்பையையும் தொட முடியாமல் திணறி வருகிறது. 

அதைவிட கடைசியாக கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய விராட் கோலி தலைமையிலான இந்தியா அவமானத்தைச் சந்தித்தது.

எனவே இந்த தொடர் தோல்விகளுக்கு இம்முறை 5 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா முற்றுப்புள்ளி வைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்காக கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோஹிட் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தரமான வீரர்களை கண்டறிந்து வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாகவே நிறைய தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனால் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அகிய அணிகளுக்கு எதிராக அனைத்து தொடர்களிலும் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. 

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா தலைமை தாங்கிய அத்தனை தொடர்களிலும் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் தோல்வியடையாமல் இந்தியா சிங்கப் பாதையில் நடந்து வருகிறது. மேலும் கடந்த 2016க்குப்பின் 5 வருடங்கள் கழித்து உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்ற அந்தஸ்தைப் பெற்று அசத்தி வரும் இந்தியா அடுத்ததாக விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. இந்த தொடரிலிருந்து இறுதிக்கட்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளதால் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் போன்ற முக்கிய வீரர்களின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்திய தொடர்களின் வாயிலாக தரமான வீரர்களை கண்டறிந்துள்ள தாங்கள் டி20 உலக கோப்பையில் விளையாடும் 80% அணியை உறுதி செய்துவிட்டதாக தெரிவிக்கும் கேப்டன் ரோஹித் சர்மா இந்த ஆசிய கோப்பை முடிவில் 100% முழுமையடைந்து விடும் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் எஞ்சியுள்ளது. அதற்கு முன்பாக ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாட உள்ளோம். எனவே ஏற்கனவே 80 – 90% அணியை நாங்கள் முடிவு செய்து விட்டோம்”

“மேலும் 3 – 4 மாற்றங்கள் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுக்க உள்ளோம். இதுவரை இந்தியாவில் விளையாடிய நாங்கள் அடுத்ததாக துபாயில் விளையாடுவதால் ஆஸ்திரேலியா கால சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். அதனால் ஆஸ்திரேலிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களது அணியில் சில சோதனைகள் மட்டும் எஞ்சியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை