இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தத்தாஜிராவ் கெய்க்வாட் காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக அறியப்படுபவர் தத்தாஜிராவ் கிருஷ்ணராவ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டுகள் வரை விளையாடி 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதில், மொத்தமாக 350 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்துள்ளார். அதில் அவரது அதிகபட்சமாக ஸ்கோராக 52 ரன்கள் எடுத்துள்ளார்.
இவர் கடந்த 1959 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஐந்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதைத்தொடர்ந்து 1959 ஆம் ஆண்டுகளில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர், தனது அதிகபட்ச ஸ்கோரான 52 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பரோடா அணிக்காக 1947 முதல் 1961ஆம் ஆண்டுவரை விளையாடிய கெய்க்வாட், 14 சதங்களுடன் 3139 ரன்களை குவித்துள்ளார். அதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் மகராஷ்டிரா அணிக்கெதிராக 249 ரன்களை அடித்ததே ஆகும்.
இந்திய அணியின் வயதான கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்தார். இந்நிலையில் தான் தற்போது 95 வயதாகும் தத்தாஜிராவ் கிருஷ்ணராவ் கெய்க்வாட், பரோடாவில் உள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரும் தத்தாஜிராவ் கிருஷ்ணராவ் கெய்க்வாட் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.