INDW vs SAW 2nd T20I: தொடர் மழை காரணமாக முதல் இன்னிங்ஸுடன் போட்டி கைவிடப்பட்டது!

Updated: Sun, Jul 07 2024 23:03 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொட்ரின் முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க மகளிர் வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் அதிரடியான தொடக்கத்தைப் பெற்ற கேப்டன் லாரா வோல்வார்ட் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை மரிஸான் கேப் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் இணைந்த தஸ்மின் பிரிட்ஸ் - அன்னேக் போஷ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தஸ்மின் பிரிட்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் தஸ்மின் பிரிட்ஸ் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய டிரையானும் 12 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். 

பின்னர் அதிரடியாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய அன்னேக் போஷ் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து நதின் டி கிளார்க் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அன்னரி டெர்க்சன் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷின்ங்கை கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாரான நேரத்தில் மழை குறுக்கிட்டத்தன் காரணமாக ஆட்டம் தாமதமானது. பின்னர் தொடர்ந்து மழை நீடித்ததன் காரணமாக இப்போட்டியானது முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையை தக்கவைத்தது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை மறுநாள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை