INDW vs SAW, Test: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்க; வலிமையான நிலையில் இந்தியா!

Updated: Sat, Jun 29 2024 20:04 IST
INDW vs SAW, Test: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென் ஆப்பிரிக்க; வலிமையான நிலையில் இந்தியா! (Image Source: Google)

 

இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷஃபாலி வர்மாவின் இரட்டை சதம் மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்களைக் குவித்திருந்தது. 

இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிச்சா கோஷும் 86 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸின் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்களை குவித்திருந்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டெல்மி டக்கர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் அன்னே போஷ்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் லாரா வோல்வார்ட் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்னே போஷ்க்கும் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய சுனே லூஸ் - மரிஸான் கேப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த சுனே லூஸ் 65 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெல்மி டக்கரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மரிஸான் கேப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மரிஸான் கேப் 69 ரன்களுடனும், நதின் டி கிளார்க் 27 ரன்களுடனும் என களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனையடுத்து நாளை நடைபெறும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 367 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை