ட்வீட்கள்  ‘ரீவிட்டுகளாக’ மாறிய சம்பவம்; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Updated: Wed, Jun 09 2021 13:57 IST
Investigation Begins On More England Stars Including Anderson, Buttler, Morgan After Tweets Resurfac (Image Source: Google)

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிவடைந்தாலும், பெரும் பரபரப்பு மைதானத்துக்கு வெளியே நடந்து கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார் பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ராபின்சன். ஆனால் அவரின் மகிழ்ச்சி அன்றைய நாள் முழுவதும் கூட நீடிக்கவில்லை. 

இதற்கு காரணம் அவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ட்வீட் என தெரியவந்தது. 8 வருடங்களுக்கு முன்பு சில ட்வீட்களை வெளியிட்டிருந்த ராபின்சன், அதில் இனவெறியை தூண்டும் விதமாகவும், பாலியல் ரீதியாக சில வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் இனவெறி பிடித்த ராபின்சனை அணியிலிருந்து உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக, ராபின்சன் கூறிய விளக்கத்தை ஏற்காத இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது இந்த ட்வீட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க சில ஆய்வுகளையும் மேற்கொண்டது.

இதனையடுத்து ஒல்லி ராபின்சன் ட்வீட் போட்டது உறுதியாகி உள்ளதால் அவரது மன்னிப்பை நிராகரித்து அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 7 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் பிரச்னை ராபின்சனோடு நிற்காததுதான் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு தலைவலியாக உள்ளது. 

ஆம், சமூக வலைத்தளவாசிகள் மேலும் சில இங்கிலாந்து வீரர்களின் பழைய ட்வீட்டுகளை ஆராய ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடக வெளிச்சம் குறைவாக இருந்த காலத்தில் போட்ட ட்வீட்டுகள் இப்போது அனைத்தும் தற்போது இங்கிலாந்து வீரர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

இதில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவிட்ட ட்வீட் ஒன்று பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் சக பந்துவீச்சாளரான ஸ்டுவர்ட் பிராட்டை லெஸ்பியன் போல இருப்பதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார். இதை ரசிகர்கள் தோண்டி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட, அதனையும் தீவிரமாக விசாரித்து வருகிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதில் வேடிக்கை என்னவென்றால் தோண்ட தோண்ட வெளியே வரும் புதையல் போல பல முக்கிய வீரர்களின் சர்ச்சைக்குரிய ட்வீட்கள் வெளியே வெளியே வர தொடங்கி இருக்கின்றன.

இதேபோல 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கனும், ஜோஸ் பட்லரும் இந்தியர்களின் ஆங்கில பேச்சை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். அதாவது இந்தியர்கள் வழக்கத்தில் பேசும் ஆங்கிலத்தை கிண்டல் செய்து பேசிக் கொண்டது தெரிய வந்துள்ளது. இதுவும் இனவெறிதான் என ரசிகர்கள் கொந்தளித்து அந்தப் பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். 

இதில் மோர்கனும், ஜோஸ் பட்லரும் ஐபிஎல்லில் விளையாடுவதால் இது இவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதவும் மார்கன் கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இந்நிலையில் ஆண்டர்சன், இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோரது ட்விட்டர் சர்ச்சை குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளது. 

இதனால் ஒல்லி ராபின்சன் போலவே இவர்களுக்கும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒருவேளை மோர்கன், பட்லர் ஆகியோருக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் அவர்களால் இந்தாண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாட முடியாவது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை