ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Updated: Thu, May 12 2022 22:42 IST
IPL 2022: Mumbai Indians beat Chennai Super Kings by 5 wickets (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே இன்னிங்ஸின் 2வது பந்திலேயே ஆட்டமிழந்தார். மும்பை வான்கடேவில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டிருந்ததால் முதல் 2 ஓவர்களுக்கு டி.ஆர்.எஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பயன்படுத்தி எல்பிடபிள்யூவுக்கான பந்தை வீசினார் டேனியல் சாம்ஸ். 

டி.ஆர்.எஸ் எடுக்க முடியாது என்பதால் நடுவர் அவுட் கொடுத்தால் பேட்ஸ்மேன் வெளியேறித்தான் ஆகவேண்டும் என்ற வாய்ப்பை பயன்படுத்தி, 2ஆவது பந்திலேயே மிகக்கடுமையாக அப்பீல் செய்தனர் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள். நடுவரும் டெவான் கான்வேவுக்கு அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் அந்த பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே போயிருக்கும். டி.ஆர்.எஸ் இல்லாததால், அதிருப்தியுடன் நடையை கட்டினார் கான்வே.

அதே ஓவரில் மொயின் அலியும் அவுட்டாக, பும்ரா வீசிய 2ஆவது ஓவரில் உத்தப்பாவும், சாம்ஸ் வீசிய இன்னிங்ஸின் 4ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டும்(7), பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6ஆவது ஓவரில் அம்பாதி ராயுடுவும்(10) ஆட்டமிழக்க, பவர்ப்ளேயில் 5 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே அணி.

அதன்பின்னரும் ஷிவம் துபே(10), பிராவோ(12), சிமர்ஜீத் சிங்(2) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற தோனியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் அடித்து ஆட முயற்சி செய்யவில்லை. இதையடுத்து 16 ஓவரில் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது சிஎஸ்கே அணி.

பின்னர் எளிய இலக்கை துரத்திய மும்பை அணியில் இஷான் கிஷான் 6, ரோஹித் சர்மா 18, டேனியல் சாம்ஸ் 1, ஸ்டப்ஸ் 0 என பவர்பிளே முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சும் கையோங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த திலக் வர்மா - சோகீன் இணை திறம்படவிளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதனால் மும்பை அணியின் வெற்றியும் உறுதியானது.     

அதன்பின் 18 ரன்களில் ஹிருத்திக் சோகீன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டிம் டேவிட் திலக் வர்மாவுடன் இணைந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் 14.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இத்தோல்வியின் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முற்றிலுமாக இழந்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை