ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி களமிறங்கியது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

Advertisement

அந்த அணியில் ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சித்தார்த் கவுல் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ஸ்கோரை தித்திப்பாக துவக்கி வைத்தார் சஹா,அடுத்து அதே ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினார் . சபாஷ் அகமது வீசிய 2ஆவது ஓவரிலும் சஹா பவுண்டரி விளாச, மறுபக்கம் சுப்மன் கில் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். அடுத்து வந்த மேத்யூ வேட் சஹாவுடன் கைகோர்த்து நிதான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.

Advertisement

ஹசில்வுட் வீசிய 5ஆவது ஓவரில் வேட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச ஸ்கோர் மீண்டும் விறுவிறுவென உயரத் துவங்கியது. ஆனால் மேக்ஸ்வெல் வீசிய அடுத்த ஓவரில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் மேத்யூ வேட் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்ச்சியின் நெருக்கடியை உணர்ந்து நிதானமாக விளையாடத் துவங்கினார். ஆனால் சஹாவும் 9வது ஓவரில் டு பிளசிஸால் ரன் அவுட் ஆக, குஜராத் அணி 64 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறத் துவங்கியது.

அடுத்து களமிறங்கிய மில்லர் ஹர்திக் உடன் கூட்டணி அமைந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் துவங்கினார். தொடந்து ஏதுவான பந்துகளை மட்டும் ஹர்திக் எல்லைக்கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருக்க, மேக்ஸ்வேல் வீசிய 14வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

ஷபாஷ் அகமது வீசிய ஓவரிலும் சிக்ஸர் மழை பொழிந்த மில்லர் ஹசரங்கா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்த அதிரடி வீரர் ராகுல் திவேத்தியாவும் 2 ரன்களில் அவுட்டாக, ரஷீத் கானுடன் கூட்டணி சேர்ந்தார் ஹர்திக். சித்தார்த் கவுல் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசிய ஹர்திக் 42 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதே ஓவரில் ரஷீத் கானும் சிக்ஸர் விளாசி ஆர்சிபி அணியை கலங்கடித்தார்.

ஹசில்வுட் வீசிய கடைசி ஓவரில் ஹர்திக், ரஷீத் தலா ஒரு சிக்ஸர் விளாச, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது குஜராத் அணி. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். 

Advertisement

இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வந்த விராட் கோலி இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை குவித்தார். அவருடன் இணைந்து கேப்டன் டூ பிளெசிஸும் பவுண்டரிகளை விளாசினார்.

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் கடந்தும் அசத்தினார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த டூ பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 73 ரன்களை எடுத்திருந்த விராட் கோலியும் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்த வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியும் அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News