பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய வாசிம் ஜாஃபர்!

Updated: Fri, Feb 11 2022 14:59 IST
IPL 2022: Wasim Jaffer steps down as Punjab Kings batting coach, makes announcement with a meme (Image Source: Google)

ஐபிஎல் 2022 மெகா ஏலத்துக்காக உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனெனில் இந்த முறை மெகா அளவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

இதில் ஒரு சில தரமான வீரர்களை வாங்க 2 – 3 அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இந்த சீசனுக்கான தங்களின் கேப்டனை இந்த ஏலத்தின் வாயிலாக தேர்வு செய்ய உள்ளதால் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் தரமான வீரர்களை கண்டறிந்து வாங்குவதற்காக அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகங்களும் பயிற்சியாளர்களும் மும்முரமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

இது பற்றி நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த வாய்ப்புக்காக நன்றி பஞ்சாப் கிங்ஸ். இந்தப் பணியை மகிழ்ச்சியாக செய்தேன். மேலும் ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட அனில் கும்ப்ளே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக எனது வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார். 

ஐபிஎல் 2022 சீசன் துவங்குவதற்கு முன்பாக திடீரென பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து வாசிம் ஜாபர் விலக என்ன காரணம் என தெரியவில்லை. இருப்பினும் தற்போது இந்தியாவில் துவங்கியுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையில் ஒடிசா அணிக்காக அவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். எனவே அதில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது முதல் 2020 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் அந்த அணிக்காக தம்மால் முடிந்தவரை அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

இருப்பினும் அவர் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கடந்த 2 சீசன்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை. பேட்டிங் பயிற்சியாளராக அவர் தலைமையில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக 2020 சீசனில் 676 ரன்களை விளாசிய அவர் கடந்த வருடம் 620 ரன்களை குவித்தார்.

வாசிம் ஜாபர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் மிகச் சிறப்பாக ஜொலித்தது. ஆனால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த வீரர்கள் சிறப்பாக பினிஷிங் செய்யத் தவறியதால் பலமுறை கையிலிருந்த வெற்றிகளை எதிரணியிடம் அந்த அணி தாரை வார்த்தது என்றே கூறலாம். இதன் காரணமாக கடந்த 2 வருடமும் அந்த அணியால் புள்ளி பட்டியலில் 6வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

அத்துடன் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் துணை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோர் லக்னோ அணிக்கு சென்று விட்டார்கள். தற்போது ஜாபரும் விலகி உள்ளதால் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பில் பெரிய பின்னடைவு ஏற்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை