ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை 153 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Thu, Apr 13 2023 21:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மொஹாலியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்சிம்ரன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே முகமது ஷமி பந்துவீச்சில் ரஷித் கானிடம் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து களமிறங்கிய மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாடினாலும், 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 36 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்‌ஷா - ஜித்தேஷ் சர்மா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

பின் 25 ரன்களில் ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பனுகா ராஜபக்க்ஷாவும் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து சாம் கரணுடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் ஷாருக் கான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 

இதற்கிடையில் அதிரடியாக விளையாட முயற்சித்த சாம் கரண் 22 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஷாருக் கான் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 22 ரன்களில் எதிர்பாராத ரன் அவுட்டின் மூலம் ஆட்டமிழந்தார். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை