ஐபிஎல் 2023: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; லக்னோவை 159 ரன்களில் சுருட்டியது பஞ்சாப்!

Updated: Sat, Apr 15 2023 21:28 IST
IPL 2023: A good bowling performance from Punjab Kings as LSG have been restricted to 159/8 in 20 ov (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதில் இன்று நடைபெற்று வரும் 21ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டத்தொடங்கிய கைல் மேயர்ஸ் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 29 ரன்களில் ஆட்டமிழந்து, பெரிய இன்னிங்ஸை விளையாட தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடாவும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ராகுலுடன் ஜோடி சேர்ந்த குர்னால் பாண்டியாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிதளவில் சோபிக்காமல் தவித்து வந்த கேஎல் ராகுல் இந்த இன்னிங்ஸில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து கம்பேக் கொடுத்தார். 

பின் 18 ரன்களை சேர்த்திருந்த குர்னால் பாண்டியா ரபாடா பந்துவீச்சில் ஷாருக் கானின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே நிக்கோலஸ் பூரனும் சிக்சர் அடிக்க முயன்று ஷாருக் கானிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் முதல் பந்து முதலே அதிரடி காட்டினாலும் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 74 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் அணி தரப்பில் கேப்டன் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை