எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!

Updated: Tue, May 16 2023 13:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன. குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் கில். 

வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில், “எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளின் மூலம் நாங்கள் பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்துள்ளோம். அடுத்தடுத்து இரண்டு தொடரிலும் நாங்கள் தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய அணியின் வீரர்கள் எந்த சவாலான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களது பங்களிப்பினை சரியாக வழங்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரு அணியாக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரிலும் வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன்.

ஒரு சில போட்டிகளில் நாங்கள் தவறுகளை செய்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மிகச் சிறப்பாக திரும்புவது எங்கள் அணியில் உள்ள வலிமையை காட்டுகிறது. இந்த தொடரில் எங்களது பந்துவீச்சாளர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்கள் தான் இந்த தொடரில் நாங்கள் இந்த நிலைக்கு தகுதி பெற காரணம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் எப்பொழுதுமே ஒரு பந்துவீச்சாளர்களின் கேப்டனாகவே செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த வெற்றியும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை