மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி - சச்சின் டெண்டுல்கர்!

Updated: Mon, May 22 2023 13:34 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. நேற்று முக்கியமான போட்டியில் மும்பை ஹைதராபாத்தையும், பெங்களூரு குஜராத்தையும் சந்தித்தன. முதலில் நடைபெற்ற போட்டியில் மும்பை ஹைதராபாத் அணியை அபாரமாக வென்று 16 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தது. மும்பைக்காக அபாரமாக விளையாடிய கேமரூன் கிரீன் தனது முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார்.

அதே சமயத்தில் அடுத்து நடக்கவிருந்த பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு ரன் ரேட் அடிப்படையில் முன்னேறும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் பெங்களூர் அணிக்காக அபாரமாக விளையாடி விராட் கோலி சதம் அடிக்க, இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் அபாரமான சதம் அடித்து வெல்ல வைத்தார்.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை தக்க வைத்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று லக்னோ அணியுடன் மோத இருக்கிறது. நேற்றைய போட்டிகளுக்குப் பிறகு ட்விட் செய்துள்ள சச்சின் கேமரூன் கிரீன் மற்றும் கில் இருவரும் மும்பை அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, விராட் கோலியின் சதத்தையும் பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேமரூன் க்ரீன், ஷுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் செய்தனர். விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் விசாசி நன்றாக விளையாடி வருகிறார். மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.  

இதையடுத்து சச்சின் உடைய பேட்டிங் பார்ட்னர் வீரேந்திர சேவாக் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் இருவரது சதத்தையும் வெகுவாக பாராட்டி, விராட் கோலிக்கு அணியிடம் இருந்து நல்ல பேட்டிங் சப்போர்ட் கிடைக்கவில்லை என்பதையும் சேர்த்து குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நேற்றைய போட்டிகள் குறித்து இர்பான் பதான், யுவராஜ் சிங் என முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை வெற்றி பெற்ற அணிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை