ஐபிஎல் 2023: அமன் கான் அரைசதத்தால் தப்பிய டெல்லி!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 44ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வர்னர் - பிலீப் சால்ட் இணை களமிறங்க, குஜராத் தரப்பில் முகமது ஷமி பந்துவீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட பிலிப் சால்ட் அதனை பவுண்டரி அடிக்க முயற்சிக்க அது நேராக டேவிட் மில்லரிடம் கேட்ச்சாக சென்றது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய பிரியம் கார்க் தனது பங்கிற்கு டேவிட் வார்னரை ரன் அவுட் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து வந்த ரைலீ ரூஸொவ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினாலும், முகமது ஷமியின் இரண்டாவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து வந்த மனீஷ் பாண்டே, முகமது ஷமி வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த பிரியம் கார்க் அந்த ஓவரியின் கடைசிப் பந்தில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் ஆறு ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து அமன் கான் - அக்ஸர் படேல் இணை குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாடினர். தொடர்ந்து இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் 27 ரன்களைச் சேர்த்திருந்த அக்ஸர் பெடல் விக்கெட்டை இழந்தார்.
ஆனலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் கான் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியையும் காற்றினார். பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 51 ரன்களை எடுத்திருந்த அமான் கான் ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய ரிபல் படேலும் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை எடுத்தது. குஜராத் அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், மொஹித் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.