ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.

Advertisement

ஒருபுறம் ரஹ்மானுல்லா நிலைத்து நிற்க மறுபுறமிருந்த வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் போல்டானார். அவருக்கு அடுத்து வந்த மந்தீப் சிங்கும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்தார். நிதிஷ் ராணாவும் 1 ரன்களில் கிளம்ப 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களைச் சேர்த்திருந்தது கொல்கத்தா.

Advertisement

இதையடுத்து 44 பந்துகளில் 57 ரன்களை குவித்த ரஹ்மானுல்லாவை கரண் சர்மா அவுட்டாக்க, அடுத்து வந்த ரஸல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியின் திரும்பினார். பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் தட்டு தடுமாறி 89 ரன்களுக்கே 5 விக்கெட்டை பறிகொடுத்தது கேகேஆர் அணி. அதுவரை அவுட்டான வீரர்களுக்கும் சேர்த்து அடுத்து வந்த ஷர்துல் தாக்கூரும் ரின்கு சிங்கும் இணைந்து 50 பந்துகளில் 103 ரன்கள் பாட்னர்ஷிப்பை அமைத்து அதிரடி காட்டினர்.

இதில் 33 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்த ரின்கு சிங்கை ஹர்ஷல் படேல் வீழ்த்தினார். அவர் சென்ற வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பெவிலியன் சென்றாலும், 29 பந்துகளில் 68 ரன்களை குவித்து அணிக்கு கடைசிக் கட்டத்தில் மிகப்பெரிய பலமாக திகழ்ந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 204 ரன்களைச் சேர்த்தது.  ஆர்சிபி அணி தரப்பில் டேவிட் வில்லி, கரண் சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 4 ஓவர்களில் 40 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் இருந்தது. 

அதன்பின் பந்துவீச வந்த சுனில் நரைன் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலியை 21 ரன்களில் க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்களைச் சேர்த்திருந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் வருண் சக்ரவர்த்தியின் மாயாஜால சுழலில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல் ஆகியோரு சொற்ப ரன்களில் வருண் சக்ரவர்த்தியிடம் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஷஃபாஸ் அஹ்மத், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வந்த வேகத்திலெயே பெவிலியனுக்கு திரும்பினர். 

பின் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் வில்லி - ஆகாஷ் தீப் இணை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஆர்சிபி அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளையும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News