ஐபிஎல் 2023: ராய், ராணா அதிரடி; ஆர்சிபிக்கு 201 டார்கெட்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் - ஜெகதீசன் இணை களமிறங்கினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசிப் பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்திருந்த ஜேசன் ராயும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ரானா இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ரானா 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் வநிந்து ஹசரங்காவிடம் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 31 ரன்களை எடுத்த நிலையில் வநிந்து ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார்.
அதேசமயம் பெர்தும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய டேவிட் வைஸ் தனது பங்கிற்கு 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ஹசரங்கா, விஜய்குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.