நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 2 சிக்ஸர், 2 ஃபோர் என அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் 2ஆவது ஓவரிலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார். 

Advertisement

பனுகா ராஜபக்‌ஷா, ஷிகர் தவான் பாட்னர்ஷிப் அமைத்து, கொல்கத்தாவின் பந்துகளை பஞ்சாக பறக்கவிட்டனர். இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது. 32 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்த பனுகா ராஜபக்‌ஷாவை உமேஷ் யாதவ் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர்களை விளாசி 21 ரன்களை தன் பங்குக்கு சேர்த்துவிட்டு கிளம்பினார். 

Advertisement

அணிக்கு நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்த்த தவான் 40 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தொடக்கத்தில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி விக்கெட்டு இழப்பால் தடுமாறி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை சேர்த்தது. அடுத்து வந்த சிக்கந்தர் ராசா (16) பெரிதாக சோபிக்கவில்லை. சாம் கரன் இறுதி ஓவரில் சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதன்மூலம் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. சாம் கரன் 26 ரன்களுடனும், ஷாருக்கான் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு மந்தீப் சிங் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மந்தீப் சிங் 2 ரன்களோடு நடையைக் கட்ட, அடுத்து வந்த அன்குல் ராயும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளெயராக களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 22 ரன்களிலும், அடுத்து வந்த நிதீஷ் ரானா 24 ரன்களிலும், ரிங்கு சிங் 4 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வெங்கடேஷ் ஐயருடன் இணைந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கேகேஆர் அணி நிச்சயம் இப்போட்டியை எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

Advertisement

ஆனால் 2 சிக்சர், 3 பவுண்டரிகள் என 35 ரன்களைச் சேர்த்திருந்த ரஸ்ஸல் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயரும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்கள் பங்கிற்கு ஒரு சிக்சரை பறக்கவிட்டனர். 

பின் இன்னிங்ஸில் 16 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி பாதியிலேயே தடைப்பட்டது. அப்போது கேகேஆர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்திருந்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News