ஐபிஎல் 2023: தோனி, ஜடேஜா போராட்டம் வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ராயல்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Wed, Apr 12 2023 23:33 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தின் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது ஓவரின் 4ஆவது பந்திலேயே அவுட்டாகி 10 ரன்களுடன் வெளியேறினார். ஜோஸ் பட்லருடன், தேவ்தத் படிக்கல் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 8 ஓவர் வரை தாக்குப்பிடித்த அவரும், ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டாகி 38 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன்கள் எதுவும் எடுக்காமல் போல்டானார். அஸ்வினும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காமல் 30 ரன்களுடன் கிளம்பினார்.

தனியொரு ஆளாக நிலைத்து ஆடிய பட்லர் 52 ரன்களுடன் கிளம்ப 17ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான். துருவ் ஜூரல் 4 ரன்களுடன் சுருங்கிவிட, கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் , ஆடம் ஜம்பா அடுத்தடுத்து ஆட்டமிழக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் 175 ரன்களை சேர்த்தது. ஷிம்ரோன் ஹெட்மேயர் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோயின் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கியா ரஹானே 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 8 ரன்களிலும், மொயீன் அலி 7 ரன்களிலும், அம்பத்தி ராயூடு ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 50 ரன்களைச் சேர்த்த கையோடு டெவான் கான்வேவும் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜே - கேப்டன் எம் எஸ் தோனி இணை தொடக்கத்தில் நிதானமாக விளையாடினாலும், கடைசி கட்டத்தில் அதிரடிக் காட்ட தொடங்கினர். அதிலும் கடைசி இரண்டு ஓவர்களில் சிஎஸ்கே அணி வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

ராஜஸ்தான் அணி தரப்பில் 19ஆவது ஓவரை ஜேசன் ஹோல்டர் வீச, அந்த ஓவரில் ரவீந்திர ஜடேஜா 2 சிச்கர், ஒரு பவுண்டரி என 19 ரன்களை விளாசினார். இதையடுத்து சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் என்ற இலக்கு இருந்தது. ராஜஸ்தான் தரப்பில் கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். 

பதற்றத்தில் முதல் இரண்டு பந்துகளை வையிடாக விசிய சந்தீப், அடுத்த பந்தில் அற்புதமான யார்கரை வீசி அசத்தினார். அதன்பின் சூதரித்துக்கொண்ட தோனி அடுத்தடுத்த பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை சிஎஸ்கேவின் பக்கம் திருப்பினார். இருப்பினும் அடுத்தடுத்த பந்துகளில் சிஎஸ்கே அணியால் இரண்டு ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கடைசி பந்தில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. 

அந்த பந்தை எதிர்கொண்ட தோனியால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த தோனி 3 சிக்சர் ஒரு பவுண்டரி என 32 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 2 சிக்சர் ஒரு பவுண்டரி என 25 ரன்களையும் சேர்த்திருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை