ஐபிஎல் 2023: ஆர்சிபியிடம் சரணடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Updated: Sun, May 14 2023 18:39 IST
Image Source: Google

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் விளையாடின.

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஹசரங்காவிற்கு பதிலாக பிரேஸ்வெல்லும், ஹேசில்வுட்டுக்கு பதிலாக வைன் பார்னெலும் ஆடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா ஆடுகிறார்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 19 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடிய கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனால் இருவருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் டுப்ளெசிஸ் 55 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். லோம்ரோர்(1) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) சொதப்பினர்.

ஆனால் கடைசியில் அனுஜ் ராவத் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 11 பந்தில் 29 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் ஆர்சிபி அணி 171 ரன்கள் அடித்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இதுஒரு கெட்ட கனவாக இருக்கும் வகையில் இந்த இன்னிங்ஸ் அமைந்தது. அந்த அணியின் அதிரடி வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், கேப்டன் சாம்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் ஸாம்பா, கேஎம் ஆசிஃப் என அனைவரும் ஒற்றையிலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இது ஒருபக்கம் இருக்க ஷிம்ரான் ஹெட்மையர் ஒருமுனையில் அதிரடியாக விளையாடி 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 35 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் 10 ரன்களைக் கடந்த ஒரே வீரும் ஷிம்ரான் ஹெட்மையர் மாட்டுமே. 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும், மைக்கேல் பிரேஸ்வெல், கரன் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களூடைய பிளே ஆஃப் வாய்ப்பிற்கு ஒரு அடி முன்சென்றுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை