ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிறங்காத நிலையில் ரஷீத் கான் அணிக்கு தலைமை தாங்கினார்.

Advertisement

அதன்படி, சஹா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சுமாரான துவக்கம் கொடுத்தனர். குஜராத்தின் டாப் ஆர்டரை சுனில் நரைன் சரித்தார். 17 ரன்கள் எடுத்திருந்த சஹாவை முதல் விக்கெட்டாக ஆட்டத்தின் ஐந்தாவது ஓரிலேயே வீழ்த்தினார். இதன்பின் ஷுப்மன் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Advertisement

வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக விளையாடிய கில் ஒருகட்டத்தில் பொறுமை இழந்து நரைன் பந்தை தூக்கி அடிக்க முயல அது நேராக உமேஷ் யாதவ் கைகளில் தஞ்சம் ஆனது. 39 ரன்களுக்கு அவர் அவுட் ஆக, அதிரடியாக தொடங்கிய அபிநவ் மனோகரை அதே அதிரடி பாணியில் போல்டாக்கி 14 ரன்களுக்கு நடையைக்கட்ட வைத்தார் சுயாஷ் சர்மா. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்ஷன் 53 ரன்கள் கடந்திருந்த நிலையில் நரைன் பந்துவீச்சில் வீழ்ந்தார். எனினும் மற்றுமொரு முனையில் இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் அவர் விட்டுச்சென்ற அதிரடியை தொடர்ந்தார்.

ஷர்துல் தாகூர் வீசிய இறுதி ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் உட்பட நான்கு சிக்ஸர்களை விளாசிய விஜய் சங்கர் 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், சுயாஷ் சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் -நாராயண் ஜெகதீசன் இணை தொடக்கம் தந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய குர்பாஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஜெகதீசனும் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதீஷ் ராணா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

பின் சதமடிமாப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரும் 83 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை அடுத்தடுத்தது வீழ்த்திய ரஷித் கான் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி குஜராத்தை வெற்றியை உறுதிசெய்தார். மேலும் கேகேஆருக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 4ஆவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். 

இதனால் கேகேஆர் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பாட்டது. குஜராத் தரப்பில் யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட ரிங்கு சிங் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு வெற்றியைத் தேடிகொடுத்தார். 

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி இந்த சீசனில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் 6 சிக்சர்களை விளாசியதுடன் 48 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவிய ரிங்கு சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News