ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் சதம்; புவனேஷ்வர் அசத்தல்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குருப் சுற்றில் இன்னும் 9 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையாததால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதில் இன்று நடைபெற்று வரும் 62ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகின்றன. இப்போடியில் டாஸ் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் விருத்திமான் சஹா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில் அரைசதம் கடக்க, மறுமுனையில் சாய் சுதர்ஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, தசுன் ஷனகா, ரஷித் கான் என அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களில் பெவிலியன் திரும்பினர்.
அதேசமயம் மறுபக்கம் பவுண்டரிகளில் மிரட்டி வந்த ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 101 ரன்களில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேபோல் ஹைதராபாத் அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, ஒரு ரன் அவுட் உள்பட 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தார். ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.