16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையவுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

அந்தவகையில் இன்று நடைபெற்ற 65ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் என மைக்கேல் பிரேஸ்வெல்லின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்க்ரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹென்ரிச் கிளாசென் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

பிம் 18 ரன்களை எடுத்திருந்த மார்க்ரம், ஷஃபாஷ் அஹ்மத் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய ஹாரி ப்ரூக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட ஹென்ரிச் கிளாசென் 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

அதன்பின் 51 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 104 ரன்களை விளாசிய ஹென்ரிச் கிளாசென், ஹர்ஷல் படேல் பந்திவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி ப்ரூக் 27 ரன்களைச் சேர்த்து உதவினார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல விராட் கோலி - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் ஒருவர் பின் ஒருவராக அரைசதம் கடக்க, இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதன்பின் தனது விஷ்வரூபத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசி 62 பந்துகளில் தனது 6ஆவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியளில் கிறிஸ் கெயிலின் சாதனையையும் சமன் செய்துள்ளார். 

அதன்பின் 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 100 ரன்கள் சேர்த்த நிலையில் விராட் கோலி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 71 ரன்களைச் சேர்த்திருந்த ஃபாஃப் டூ பிளெசிஸும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 14 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியளில் 4ஆம் இடத்திற்கு முன்னேறியதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News