இந்த தோல்வி எங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!

Updated: Sun, Apr 23 2023 12:40 IST
IPL 2023: We Can't Start Worrying About Things, Says Rohit Sharma After MI's Loss Against PBKS (Image Source: Google)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31ஆவது லீக் போட்டியானது நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியானது தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் சாம் கரன் 55 ரன்களையும், ஹர்ப்ரீத் பாட்டியா 41 ரன்களையும் குவித்தனர். பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே குவிக்க 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த தோல்வி எங்களுக்கு உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் பீல்டிங்கின் போது நாங்கள் சில தவறுகளை செய்து விட்டோம். ஆனாலும் இது போன்ற தவறுகள் கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதனால் அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட தேவையில்லை.

நாம் இதுவரை மூன்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளோம் எனவே தற்போது தொடரில் நாம் சமநிலையில் தான் உள்ளோம். இன்னும் இந்த தொடரில் நிறைய போட்டிகள் இருக்கின்றன. எனவே தவறுகளைப் பற்றி கவலைப்படாமல் வருத்தப்படாமல் அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை நோக்கி எங்களது கவனம் இருக்கப் போகிறது.

இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் தவறுகளை செய்து விட்டோம். ஆனால் பேட்டிங்கில் எங்களது வீரர்கள் பிரமாதமாகவே கடைசி வரை விளையாடினார்கள். இறுதியில் கடைசி இரண்டு ஓவர்களை அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசினார்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை