13 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனைப் படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு யாரும் சரிவர விளையாடவில்லை. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் மற்றும் 57 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் வந்தது. இதை எடுத்து எளிமையான இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம்வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் துவக்கம் தர வந்தார்கள்.
ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்ததால் இந்த முறை முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா கையில் எடுத்தார். அவர் இந்த முடிவுக்காக பின்பு நிறைய வருத்தப்பட்டு இருப்பார். அவர் வீசிய முதல் ஓவரில் 6, 6, 4, 2, 4, 4 என்று ஜெய்ஸ்வால் 26 ரன்கள் குவித்து மிரட்டினார்.
தொடர்ந்து விளையாடிய அவர் ஹர்ஷித் ராணா வீசிய ஓவரில் மூன்று பந்துகளில் 1, 4, 6 என ரன்கள் எடுத்தார். அடுத்து சர்துல் தாக்கூர் வீசிய மூன்றாவது ஓவரில் 4, 4, 4, 1 என்று ரன்கள் எடுத்து 13 பந்தில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
அவரது இந்த அரைசதம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். இதற்கு முன்பு 14 பந்துகளில் கே எல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் அடித்திருக்கிறார்கள். உலக அளவில் மொத்தமான டி20 கிரிக்கெட்டில் இது நான்காவது அதிவேக அரை சதம் ஆகும். இதற்கு முன்பு 12 பந்துகளில் யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், ஹஸ்ரதுள்ளா ஸஸாய் ஆகியோர் அரை சதம் அடித்திருக்கிறார்கள்.