ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Wed, Apr 10 2024 23:51 IST
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது குஜராத் டைட்டன்ஸ்! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்தினன. இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தொடங்குவது தாமதமானது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நடப்பு சீசனில் சரியான தொடக்கம் கிடைக்காமல் தடுமாறி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இப்போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து சிறப்பான தொடத்தைப் பெற்றனர். இதனால் இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய ஸ்கோரை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஜோஸ் பட்லர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஷித் கானின் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 42 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியத்துடன், சீரான வேகத்தில் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். 

ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடியாக விளையாட தொடங்கிய ரியான் பராக் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களையும் விளாசி 36 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுபக்கம் கேப்டன் இன்னிங்ஸ் விளையாடி வந்த சஞ்சு சாம்சனும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதன் மூலம், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. அதேசமயம் இப்போட்டியில் ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த சீசனில் தங்களது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர்.

அதன்பின் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரியான் பராக் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 76 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களையும், அவருக்கு துணையாக ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 12 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களைக் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 64 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மேத்யூ வேட் 4 ரன்களுக்கும், அபினவ் மனோகர் ஒரு ரன்னிலும், அதிரடியாக விளையாடிய விஜய் சங்கர் 16 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் தனது கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடிய ஷுப்மன் கில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த ஷுப்மன் கில் 6  பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சஹாலியின் யுக்தியில் தனது விக்கெட்டை இழந்தார்.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 133 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய ஷாருக் கான் அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த நிலையில், ஒரு பவுண்ட்ரி, ஒரு சிக்சர் என 14 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ராகுல் திவேத்தியா - ரஷித் கான் இணை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச, குஜராத் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

ராஜஸ்தான் ராயல் அணி தரப்பில் கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீசா, அதனை எதிர்கொண்ட ரஷித் கான் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். இதனால் கடைசி இரண்டு பந்துகளில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், ராகுல் திவேத்தியா அந்த பந்தில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஷித் கான் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை