நாங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Sun, May 05 2024 14:58 IST
நாங்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதில் அதிகபட்சமாக ஷாருக் கான் 37 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யாஷ் தயாள், முகமது சிராஜ், வைசாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இப்போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதற்கிடையில் வில் ஜேக்ஸ், கேமரூன் க்ரீன், ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் ஆர்சிபி அணி 116 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும், அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஸ்வப்நில் சிங் இணை இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் 21 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 15 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “கடந்த சில போட்டிகளாக நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் நல்ல முன்னேற்றமடைந்துள்ளோம். களத்தில் எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்றைய போட்டியில் இந்த மைதானத்தில் சற்று கூடுதல் பவுன்ஸ் இருந்தது. இந்த பிட்ச் எங்களுக்கு வழங்கப்படும் போது நான் பந்துவீச்சாளர்களிடம் இந்த கூடுதல் பவுன்ஸ் பற்றி பேசியிருந்தேன். அந்த வகையில் அவர்களும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர். 

இப்போட்டியில் நாங்கள் ஒரு சில கேட்சுகளை தவறவிட்டாலும், அது பெரிதளவில் எந்த பாதிப்பையும் ஏற்ற்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் 180 முதல் 190 ரன்கள் வரை அடித்தாலும் எளிதாக அடிக்க முடியும். ஆனாலும் நாங்கள் ஸ்கோர் போர்டை பார்க்காமல் உள்ளே சென்றதிலிருந்து எவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக போட்டியை முடிக்க விரும்பினோம். ஏனெனில் நாங்கள் இந்த போட்டியில் எங்களது ரன் ரேட்டை உயர்த்த எண்ணினோம். ஆனால் இடையில் நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்ததுமே சற்று பதட்டம் ஏற்பட்டது. அதன் காரண்மாக எங்களால் நினைத்தபடி விளையாட முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை