எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன் - விராட் கோலி!

Updated: Fri, May 10 2024 15:23 IST
எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன் - விராட் கோலி! (Image Source: Google)

பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களையும், ராஜத் பட்டிதார் 57 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங் உள்ளிட்ட வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடி பேட்டிங்கில் 92 ரன்களையும், ஃபீல்டிங்கில் ரன் அவுட்டும் செய்து மிரட்டிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் பேசிய விராட் கோலி, “என்னைப் பொறுத்தவரையில் ரன்களின் எண்ணிக்கையை விட தரமே முக்கியமானது. எனக்கு இந்த தத்துவம் நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். ஆட்டம் குறித்த புரிதல் காரணமாக குறைந்த நேரம் பயிற்சி மட்டும் மேற்கொள்ள முடிகிறது. இதற்கு முன்பு நாம் என்ன செய்தேனோ அதையே செய்தால் போதுமானதாக இருக்கிறது. 

ஆட்டத்தின் அம்சத்தை மேம்படுத்துவதே நோக்கம். இதுவொரு செயல்முறை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக்ஸ்வீப் ஆடுகிறேன். இதை நான் கடந்த காலங்களில் செய்துள்ளேன். நான் ரிஸ்க் எடுத்து ஆட வேண்டும் என்று எனக்கு தெரியும். எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன். அது அணிக்கும் அவசியமானது. இந்தத் தொடரில் நாங்கள் நேர்மையாக விளையாடுவது மட்டுமே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும்.

தொடர் தோல்வியில் இருக்கும்போது எங்களுக்குள் நேர்மறையான விவாதம் தேவைப்பட்டது. கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் த்ரில்லிங்காக சென்றது. நாங்கள் எங்களது சுயமரியாதைக்காக விளையாட விரும்பினோம். கடமைக்காக சென்று விளையாடி எங்களது ரசிகர்களை வருத்தமடைய விடக்கூடாது. அணியாக நம்பிக்கை மீண்டும் வந்துள்ளது. நாங்கள் மற்ற விஷயங்களை சார்ந்திருக்காமல் தொடரின் தொடக்கத்தில் நன்றாக விளையாடியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை