இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்!

Updated: Sat, May 04 2024 22:05 IST
இந்த சீசனில் மயங்க் யாதவ் இனி விளையாடமாட்டார் - ஜஸ்டின் லங்கர்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 48ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது லக்னோ அணி தரப்பில் பந்துவீசிய மயங்க் யாதவ், தனது 4ஆவது ஓவரை வீசிய போது காயமடைந்து பெவிலியனுக்கு திரும்பினார். ஏற்கெனவே நடப்பு ஐபிஎல் தொடரில் காயத்தை சந்தித்திருந்த மயங்க் யாதவ், சில போட்டிகளில் விளையாடமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் தனது காயத்திலிருந்து மீண்டு மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்றார். 

அந்த போட்டியில் 3.1 ஓவர்களில் 31 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய மயங்க் யாதவ், மீண்டும் காயத்தை சந்தித்ததுடன் பெவிலியனுக்கும் திரும்பினார். இதனால் அந்த ஓவரின் மீதமிருந்த பந்துகளை மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் வீசினார். இதையடுத்து மயங்க் யாதவின் காயம் குறித்து எந்த தகவலும் வெளியாகமல் இருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தே விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் மயங்க் யாதவ் குறித்து பேசிய லக்னோஅணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், “வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது ஸ்கேன் முடிவுகளும் காயம் தீவிரமடைந்துள்ளதை காட்டுக்கிறது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் இல்லாதது எங்களுக்கு துரதிருஷ்டவசமானது. அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்” என்று தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து மயங்க் யாதவ் விலகுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக இந்த சீசனில் மயங்க் யாதவ் விளையாடிய முதலிரண்டு போட்டிகளிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதுடன், இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தற்போது அவர் தொடரிலிருந்து விலகுவது லக்னோ அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை