இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்டை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஏல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் தீபக் ஹூடாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, லக்னோ அணி 69 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பூரன், அர்ஜூன் டெண்டுகள் வீசிய இன்னிங்ஸின் 15ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசியதுடன் 19 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அவருக்கு துணையாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. 

பின்னர் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 75 ரன்களைச் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் பூரனும், 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 55 ரன்கள் சேர்த்த நிலையில் கேஎல் ராகுலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஆயூஷ் பதோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி 22 ரன்களையும், குர்னால் பாண்டியா 12 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நுவான் துஷாரா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - டெவால்ட் ப்ரீவிஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட, மறுபக்கம் டெவால்ட் பிரீவிஸ் பந்துகளை எதிர்கொள்ள சற்று தடுமாறினார். மேற்கொப்டு போட்டிக்கு இடையே மழை பெய்த காரணத்தில் ஆட்டம் சற்று நேரம் தடைபட்டத்தது. பின்னர் மீண்டும் தொடங்கிய ஆட்டத்திலும் தனது அதிரடியைக் கைவிடாத ரோஹித் சர்மா 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களில் விக்கேட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மாவும் 10 பவுண்டரி,3 சிக்ஸர்களுடன் 68 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 16 ரன்களுக்கும், நெஹால் வதேரா ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

Advertisement

பின்னர் இணைந்த இஷான் கிஷான் - நமன் தீர் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசிய நமன் தீர் 25 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் இறுதிவரை போராடிய நமன் தீர் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களைச் சேர்த்த நிலையிலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News