டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!

Updated: Wed, Mar 20 2024 13:16 IST
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்தது. 

ஆனால் தனது காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பந்த் அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்நிலையில் தான் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்து விளையாடுவதற்கு  தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ஒப்புதல் வழங்கினர்.

ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே ரிஷப் பந்த் களமிறங்குவார் என்றும், அவரின் உடல் நிலை பொறுத்து கீப்பிங் செய்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் நடப்பு சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் செயல்படுவார் என அந்த அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு ரிஷப் பந்த் கார் விபத்து காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதன் காரணமாக நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில் கம்பேக் கொடுள்ள ரிஷப் பந்த் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை