ஐபிஎல் 2024: கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த்; தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Updated: Mon, Dec 11 2023 22:26 IST
ஐபிஎல் 2024: கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த்; தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி! (Image Source: Google)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு துபாயில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை தக்க வைத்துள்ளதால் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஐபிஎல் தொடருக்குள் ரிஷப் பந்த் முழு உடற்தகுதியை எட்டி பயிற்சியினை மேற்கொண்டு களத்திற்கு திரும்புவாரா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

இந்நிலையில் தற்போது வெளியாக்கியுள்ள ஒரு தகவலின் படி, ரிஷப் பந்த் கட்டாயமாக 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.  மேலும் ரிஷப் பந்த் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் அவர் இம்பேக்ட் ப்ளேயராகவே அணியில் விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் காயமடைந்த அவரால் முழு தொடரையும் விளையாட முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளன.

அதேவேளையில் அபிஷேக் போரல் விக்கெட் கீப்பராக செயல்படும் பட்சத்தில் இம்பேக்ட் பிளேயராக ஒரு முழுநேர பேட்ஸ்மனாக ரிஷப் பந்த் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி இம்பேக்ட் பிளேயராக ரிஷப் பந்த் விளையாடும் பட்சத்தில் கடந்த ஆண்டு டெல்லி அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரே இந்த ஆண்டும் அந்த அணியை வழி நடத்துவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை