அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்; அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்!

Updated: Mon, Apr 01 2024 20:05 IST
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய டிரெண்ட் போல்ட்; அதிர்ச்சியில் உறைந்த மும்பை ரசிகர்கள்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 14ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இபோட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 5ஆவது பந்தை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, அதனை சரியாக கணிக்க தவற பந்து பேட்டில் பட்டி எட்ஜ் எடுத்தது. இதனை சரியாக கணித்த சஞ்சு சாம்சன் டைவ் அடித்ததுடன் ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். 

இதன்மூலம் ரோஹித் சர்மா முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நமன் திரும் தனது முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஓவரில் ஒரு ரன்னிற்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

 

அதன்பின் இரண்டாவது ஓவரில் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் அந்த ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். அதன்பின் தனது இரண்டாவது ஓவரை வீச வந்த டிரெண்ட் போல்ட் அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் டெவால்ட் ப்ரீவிஸின் விக்கெட்டையும் கைப்பற்றி மிரட்டினார். அவரைத் தொடர்ந்து 16 ரன்கள் சேர்த்திருந்த இஷான் கிஷானின் விக்கெட்டை நந்த்ரே பர்கர் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் டிரெண்ட் போல்ட் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை