ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தேன் - ஹர்ப்ரீத் பிரார்!

Updated: Tue, Mar 26 2024 23:10 IST
ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சி செய்தேன் - ஹர்ப்ரீத் பிரார்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் போன்றோர் சோபிக்க தவறினாலும் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 77 ரன்களைச் சேர்த்தார். அதன்பின் இறுதியில் தினேஷ் கார்த்திக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது

இந்த நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் முடிந்த அளவுக்கு ரன்கள் எடுக்க முடியாத அளவுக்கு பந்துவீச முயற்சித்ததாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் பிரார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டி20 கிரிக்கெட்டில் சரியான லெந்தில் பந்துவீசுவது தான் முக்கியம். நான் பேட்டர்களின் அடிக்கும் ஆர்க்கிலிருந்து சற்று தொலைவில் பந்து வீச விரும்புகிறேன். பெங்களூரு விக்கெட்டில் இருந்து எங்களுக்கு சிறிது உதவி கிடைத்தது. அதனால் நான் வீசும் பந்தை அடிப்பது எளிதல்ல.

நாங்கள் பேட்டிங் செய்யும் போது விக்கெட்டை நன்றாக மதிப்பீடு செய்தோம். ஆட்டத்தின் போது நான் நல்ல லெந்த் மற்றும் லனில் பந்துவீசுவதில் கவனம் செலுத்தினேன். ரன்கள் எடுக்க முடியாத வகையில் என்னால் முடிந்த அளவுக்கு பந்துவீச முயற்சி செய்தேன். அந்த முயற்சியின்போது எனக்கு 2 விக்கெட்டுகளும் கிடைத்தன. இப்போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு எவ்வளவு அழுத்தத்தை ஏற்படுத்த என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தேன்” என்று கூறினார். நேற்றையப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஹர்பிரீத் பிரார் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை