ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அதிரடி காட்டிய பிரித்வி ஷா 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி தொடக்க வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்கும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசிய நிலையில் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய் ஷாய் ஹோப் 6 ரன்களுக்கும், அபிஷேக் போரெல் 18 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 68 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

பின்னர் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் அக்ஸர் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் அதிரடியாக விளையாட முயற்சித்த ரிஷப் பந்த் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து 15 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேலும், இம்பேக் வீரராக களமிறங்கிய குமார் குஷாக்ரா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய குல்தீப் யாதவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் 8 ரன்கள் எடுத்த நிலையில் ரஷிக் சலாம் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குல்தீப் யாதவ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்களைச் சேர்த்து அணியை கரைசேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் எப்போதும் அதிரடி காட்டம் சுனில் நரைன் இம்முறை ஸ்டிரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்துவர மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பிலிப் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களை விளாசித்தள்ளினார். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்ட் வெறும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

பிலிப் சால்ட்டின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவர்பிளேவில் விக்கெட்டுகள் ஏதுமின்றி 79 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் பந்துவீச வந்த அக்ஸர் படேலை அட்டாக் செய்ய முயற்சித்த சுனில் நரைன் அந்த ஓவரின் முதல் பந்தையே தூக்கி அடித்து ஜேக் ஃபிரேசரிடம் கேட்ச் கொடுத்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிலிப் சால்ட்டும் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 68 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

பின்னர் இன்றைய போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய ரிங்கு சிங்குவும் 11 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரி அடித்து அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தங்களது 6ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் 2ஆம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News