ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!

Updated: Sat, Mar 30 2024 13:49 IST
ஐபிஎல் 2024: ரிங்கு சிங்கிற்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 83 ரன்களை எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த சுனில் நரைன் 47 ரன்களையும், பில் சால்ட் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், அடுத்து களமிரங்கிய வெங்கடேஷ் ஐயரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கேகேஆர் வீரர் ரிங்கு சிங்குவிற்கு பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த ரிங்கு சிங், சர்வதேச கிரிக்கெட்டிலும் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஃபினிஷராகவும் ரிங்கு சிங் பார்க்கப்பட்டு வருகிறார்.

 

அந்தவகையில் இந்திய அணியின் ஜம்பவானாக வலம் வரும் விராட் கோலி, சக வீரரான ரிங்கு சிங்குவை ஊக்குவிக்கும் விதமாக நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேட் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இதனை ஆர்சிபி அணி நிர்வாகம் காணொளியாகவும் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை