பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களைச் சேர்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரன், பிரப்ஷிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ரைலீ ரூஸோவ், ஹர்ப்ரீப் பாட்டியா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஷாங்க் சிங் 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த அஷுதோஷ் சர்மா அரைசதம் கடந்த நிலையில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன்பின் பேசிய அவர், “இது மிகவும் நெருக்கமான போட்டி. உணமையில் நாங்கள் நினைத்ததை விட இந்த போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் நீங்கள் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பீர்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பந்து 2 ஓவர்கள் ஸ்விங் ஆகும். எனவே நான் அதிகமாக பந்து வீச விரும்பும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன்.

அதுவே என்னுடைய ஆசையை திருப்தி செய்யும். டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பந்துவீச சற்று கடினமாக உள்ளது. ஏனெனில் இந்த ஃபார்மெட்டில் நேரம் குறைவு, இம்பேக்ட் வீரர் விதிமுறை போன்றவையால் இது கடினமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி இம்பேக் வீரர் விதியால் பேட்டிங் வரிசையும் ஆழமாகியுள்ளது. ஆனால் அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் பவுலர்களுக்கு சில ஆலோசனைகளை கொடுக்கிறேன். இருப்பினும் அழுத்தமான தருணத்தில் நீங்கள் அதிகமான ஆலோசனைஅயி கொடுக்க விரும்ப மாட்டீர்கள்" என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News