ஒரு கேப்டனாக, நான் என் பணியை ரசிக்கிறேன் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அபிஷேக் போரல் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களையும், கேஏல் ராகுல் 2 பவுண்ட்ரி, 2 சிக்சர்களுடன் 38 ரன்களையும், கேப்டன் அக்ஸ படேல் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நிதீஷ் ரானா ஆகியோர் அரைசதம் கடந்ததுடன் தலா 51 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் அதிரடியாக தொடங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் காயம் காரனமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் ராஸ்தான் ராயல்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
இதனையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 4 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய டெல்லி கேப்டன் அக்ஸர் படேல், “ஒரு கேப்டனாக, நான் என் பணியை ரசிக்கிறேன். இதையெல்லாம் நான் மாநில கிரிக்கெட்டுக்காகவும் செய்து கொண்டிருந்தேன். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்குத் தெரியும். உங்கள் விருப்பப்படி அணியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும்போது, நீங்கள் கிரிக்கெட் விளையாட விரும்பும் வழியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது அது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
நான் அதை மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேயும் ரசிக்கிறேன். ஒரு கேப்டனாக எனது அணி இப்படிச் செயல்பட்டு, இதுபோன்ற சூழ்நிலையில் வெற்றி பெறுவதைப் பார்ப்பது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. பந்துவீச்சின் போது ரிவர்ஸ் ஸ்விங்கைப் பெறுவது ஒரு விஷயம் என்றாலும், அதைச் சரியாக செயல்படுத்துவது மிகவும் முக்கியம். மிட்செல் ஸ்டார்க் அழுத்தத்தின் கீழ் அதைச் சிறப்பாகச் செயல்படுத்தினார். மேலும் நான் அவரைத் தன்னை தனே ஆதரிக்கும்படி கூறினேன்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில், அவர் 18வது ஓவரை வீச வந்தபோது, அவர் அதை சரியாகச் செய்கிறார் என்று நினைத்தேன்; எங்கு பந்து வீச வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வீரர் மற்றும் ஒரு ஜாம்பவான். டெத் ஓவர்களில் கூட தனது திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப் போகிறார் என்பது குறித்து அவருக்கு மிகத் தெளிவான மனநிலை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.