ஐபிஎல் 2025: டைட்டன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கிங்ஸ்!

Updated: Sun, May 25 2025 19:09 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆயூஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தன. இதில் ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் உர்வில் படேல் இணையும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் இருவரும் இணைந்த இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் உர்வில் படேல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களில் ஆட்டமிழக்க, 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த கையோடு டெவான் கான்வேவும் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த டெவால்ட் ப்ரீவிஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 19 பந்துகளில் அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், ஷாரூக்கான், ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஷுப்மன் கில் 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 05 ரன்களிலும், ஷெர்ஃபேன் ரூத்ரஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் சாய் சுதர்ஷனுடன் இணைந்த ஷாருக்கான் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியியில் இறங்கினார். 

இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ஷாருக் கான் 2 சிக்ஸர்களூடன் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரிகளுடன் 41 ரன்களை எடுத்திருந்த சாய் சுதர்ஷனும் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய வீரர்களில் ரஷித் கான் 12 ரன்களிலும், ராகுல் திவேத்தியா 14 ரன்னிலும், ஜெரால்ட் கோட்ஸி 5 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய அர்ஷத் கான் 3 சிக்ஸர்களுடன் 20 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Also Read: LIVE Cricket Score

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் மற்றும் அன்ஷூல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வீழ்த்தி வெற்றி பெற்ற கையோடு இந்த ஐபிஎல் சீசனை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை