ஐபிஎல் 2025: கேஎல் ராகுல், அக்சர் படேல் அதிரடியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 40ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் கடந்து விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து தொடக்கத்தை பெற்ற நிலையில் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய அப்துல் சமத்தும் 2 ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு நிதானமாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் இணைந்த டேவிட் மில்லர் மற்றும் ஆயூஷ் பதோனி மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய நிலையில் 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரிஷப் பந்தும் ரன்காள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மேற்கொண்டு இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 14 ரன்களைச் சேர்க்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கருண் நாயர் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை பெற்றிருந்த நிலையில் கருண் நாயர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அபிஷேக் போரல் மற்றும் கேஎல் ராகுல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த அபிஷேக் போரல் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியையும் ஏறத்தாழ உறுதிசெய்திருந்தனர். அச்சமயத்தில் அபிஷேக் போரால் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் அக்ஸர் படேலும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
Also Read: LIVE Cricket Score
மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியளிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.