ஐபிஎல் 2025: டெல்லி அணியுடன் இணைந்த ஃபாஃப் டூ பிளெசிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பாதுகாப்பு காரணங்களாலும், சர்வதேச போட்டிகள் காரணமாகவும், காயம் காரணமாகவும் சில வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றன. இதற்கு மத்தியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு உத்வேகமளிக்கும் வகையில், அந்த அணியின் துணைக்கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளனர்.
முன்னதாக இவர்கள் இவரும் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்ற தகவல் வெளியானது. மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம்பிடித்துள்ளதன் காரணமாக, அவர் பங்கேற்பது சந்தேகம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்சமயம் அவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ள அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதில் மெக்குர்கிற்கு பதிலாக முஸ்தஃபீசூர் ரஹ்மானை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் நிலை குறித்து இன்னும் உறுதிபடுத்தப்பட்ட எந்தகவலும் வெளியாகவில்லை.
Also Read: LIVE Cricket Score
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்விகள் என 13 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் எஞ்சிய போட்டிகளில் அந்த அணி சிறப்பான ரன் ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், தற்போது அந்த அணி தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.