ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி: பாஞ்சாப் கிங்ஸுக்கு 191 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வாலும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் விராட் கோலியுடன் இணைந்த கேப்டன் ராஜத் படிதார் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினார். இதில் இருவரும் இணைந்து 40 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் ரஜத் படிதார் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 24 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ரொமாரியோ ஷெஃபர்ட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்னிலும், குர்னால் பாண்டியா 4 ரன்னிலும், புவனேஷ்வர் குமார் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.