கேகேஆர் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ நியமனம்!
உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களது தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேற்கொண்டு எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறக்கவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் தங்கள் அணியின் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோவை நியமித்துள்ளது. முன்னதாக கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், தற்சமயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அப்பதவிக்கு கேகேஆர் நிர்வாகம் மாற்று நபரைத் தேடிவந்தது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த டுவைன் பிராவோ, நேற்றைய போட்டிக்கு பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில் தான் நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் டுவின் பிராவோவை தங்கள் அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது. முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டுவைன் பிராவோ செயல்பட்டு வந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் தற்சமயம் அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகி, கேகேஆர் அணியின் ஆலோசகர் பதவியை ஏற்றுள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டுவைன் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய கேகேஆர் அணி தற்சமயம் டுவைன் பிராவோவின் மேற்பார்வையின் கீழ் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.