ஸ்லோ ஓவர் ரேட்: லக்னோ அணி கேப்டன், வீரர்களுக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 67 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சதமடித்து அசத்தியதுடன் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 118 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 54 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்மா 85 ரன்களையும், மயங்க் அகர்வால் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி மூன்றாவது முறையாக பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக இந்த முறை ரிஷப் பந்திற்கு ரூ.30 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னதாக ரிஷப் பந்திற்கு இதே குற்றத்திற்காக ரூ.6 மற்றும் ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லெவனில் விளையாடிய வீரர்கள், இம்பேக்ட் வீரர்கள் உள்பட அனைவருக்கும் தலா ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
இதற்கு முன் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸின் ஷுப்மன் கில், ராஜஸ்தான் ராயல்ஸின் ரியான் பராக், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும், மும்பை இந்தியன்ஸின் ஹர்திக் பாண்டியாவிற்கும், ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூருவின் ரஜத் படிதாருக்கும், டெல்லி கேப்பிட்டல்ஸின் அக்ஸர் பாடேல் அகியோருக்கும் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக பிசிசிஐ அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.