ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: பஞ்சாப் கிங்ஸுக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!

Updated: Mon, Jun 02 2025 00:31 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மாற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தாமதமானது. மழை நின்ற பின் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா முதல் பந்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் ஜானி பேர்ஸ்டோவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களிலும், திலக் வர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 15 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதில் நமன்தீர் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை