ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கௌகாத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதானமாக தொடங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 33 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக் ஓரளவு தாக்குப்பிடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் அதிரடியாக தொடங்கிய ரியான் பராக் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்த கையோடு தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வநிந்து ஹசரங்கா 4 ரன்களிலும், நிதீஷ் ரானா 8 ரன்களிலும், ஷுபம் தூபே 9 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெல் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், ஓரளவு ரன்களையும் சேர்த்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதியில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களைச் சேர்த்த கையோடு துருவ் ஜூரெலும், 7 ரன்களுடன் ஷிம்ரான் ஹெட்மையரும் விக்கெட்டை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடி இரண்டு சிக்ஸர்களை விளாசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.